Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, May 13, 2011

தமிழகத்தில் அதிமுக 147, தேமுதிக 29, திமுக 23, மே. வங்காளத்தில் மம்தா சாதனை

இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அஸாம் ஆகிய 4  மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும்  நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதன்படி தமிழகத்தில் 234 ஆசனங்களைக்கொண்ட சட்ட சபையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 31 ஆசனங்களை மாத்திரம் வென்றுள்ளது.


அ.தி.மு.க. தலைவி ஜெ. ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வென்றார். அ.தி.மு.க. தலைமையிலாv கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத் குமார் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.கருணாநிதி தொடர்ந்து 13 ஆவது  தடவையாக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இம்முறை அவர் தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. மு.க. ஸ்டாலின் கொளத்தூர்  தொகுதியில் வென்றார்.
அ.தி.மு.க. கூட்டணியின் 203 ஆசனங்களில் அதிமுக 147 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தே.மு.தி.க. 29 ஆசனங்களையும் இடது கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியன தலா 9 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
திமு.க கூட்டணியின் 31 ஆசனங்களில் திமு.க 23 ஆசனங்களைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 ஆசனங்களையும் பா.ம.க. 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இதுவரை தமிழக முதல்வராக பதவி வகித்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் கையளித்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா ஜெயராம் 3 ஆவது தடவையாக நாளை  முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.  ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கப்போவதில்லை என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா சாதனை

294 ஆசனங்களைக் கொண் மேற்கு வங்காள சட்ட சபைக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 225 தொகுதிகளில் வென்றுள்ளது. இக்கூட்டணியிலேயே தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது. திரிணாமுல் காங்கிரஸுக்கு 181  ஆசனங்களும். காங்கிரஸ் கட்சிக்கு 42 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி 63 ஆசனங்களை மாத்திரமே வென்றுள்ளது. இதனால் 34 வருடங்களின்பின் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகிக்கும் மம்தா பானர்ஜி இத்தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் இடைத் தேர்தலொன்றில் போட்டியிட்டு வெல்வதன் மூலம் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக அவர் பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் வகிக்குமாறு தேசிய காங்கிரஸ் உட்பட தனது கூட்டணி கட்சிகளுக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு குறித்து சோனியா காந்தி தீர்மானிப்பார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அஸாமில் காங்கிரஸ் வெற்றி
அஸாம் மாநிலத்தில் 126 ஆசனங்களைக் கொண்ட சட்ட சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி 76 ஆசனங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அஸாம் கண பரிசத் 10 ஆசனங்களை வென்றுள்ளது.

கேரளத்தில் காங்கிரஸ் மயிரிழையில் வெற்றி


கேரள மாநிலத்தில் காங்கிரஸ் சொற்ப வித்தியாசத்தில் வென்றுள்ளது. 140 ஆசனங்களைக் கொண்ட சட்ட சபையில் காங்கிரஸ் கட்சி 72 ஆசனங்களையும் இடது முன்னணி 68 ஆசனங்களையும் வென்றுள்ளன.
புதுச்சேரியும் அதிமுக வசம்

இதேவேளை 30 ஆசனங்கள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட சபைக்கான தேர்தலில் அதிமுக கூட்டணி 20 ஆசனங்களையும் தி.மு.க. கூட்டணி 10 ஆசனங்களையும் வென்றுள்ளன.

sources tamilmirror

No comments:

Post a Comment