Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, May 23, 2011

முந்தல், அம்பேபுஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில்: கோர விபத்துக்களில் எழுவர் பலி 12 பேர் காயம்



வரக்காப்பொல மற்றும் முந்தல் பொலிஸ் பிரிவுகளில் நேற்று இடம்பெற்ற இரு வேறு கோர விபத்துக்களில் ஏழு பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வரக்காப்பொல, அம்பேபுஸ்ஸ தேவாலய சந்தியில் அதி காலை 4.45 மணியளவிலும், முந்தல் பந்துலுஓய பிரதேசத்தின் 61வது சந்தியில் அதிகாலை 5.50 மணியளவிலும் இக்கோர விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விபத்துக்கள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது, கொழும்பிலிருந்து வெசாக் கொண்டாட்டங்களைப் பார்வையிட்டு அலவுவ, புத்கமுக நோக்கிச் சென்றுகொண்டிருந்த பொங்கோ ரக வான் (58- 8480) எதிரேவந்த பூசோ மிட்சுபிஷி ரக (ஏல்.ஏ- 8548) இலக்க லொறியுடன் நேருக்கு நோர் மோதுண்டதில் ஸ்தலத்திலேயே நால்வர் உயிரிழந்தனர்.
விபத்து கொழும்பு கண்டி பிரதான வீதியில் 58-59 கிலோ மீற்றருக்கு இடைப்பட்ட தூரத்தில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் வைத்தே இடம்பெற்றுள்ளது. எதிரெதிர் திசையில் வந்த வானும் லொறியும் மோதுண்டதில் வானில் பயணம் செய்த வான் சாரதி உட்பட இரண்டு பெண்களும் லொறி சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் சுகத் சந்தன குமார, சுனில் அசோக, மல்லிகா ஆராச்சிகே பொடி மெனிக்கே, கம்லத் ராலலாகே பொடிமெனிக்கே ஆகியோர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 10 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முந்தல் பொலிஸ் பிரிவில் புத்தளம் சிலாபம் பிரதான வீதியில் பந்துலுஓய 61வது சந்தியில் இரண்டு லொறிகள் மோதிக்கொண்டதில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டிருப்பதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் இரண்டு லொறிகளின் சாரதிகளும், ஒரு லொறியில் பயணம் செய்தவருமே கொல்லப்பட்டுள்ளனர்.
டபிள்யூ.பி-எல்.டி 1526 எனும் லொறியின் சாரதியான லுனுவிலயைச் சேர்ந்த அமகஹகே சுனில் பிரியந்தவும், டபிள்யூ.பி-எல்.டி 6166 எனும் லொறியின் சாரதியான மாவனல்லையைச் சேர்ந்த ஏ.பி.பிரேமதிலக கம்புல்வில என்பவரும் அதே லொறியில் பயணம் செய்த பிரேமவந்த எனும் உதவியாளர் ஒருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு லொறிகளிலும் பயணம் செய்து விபத்துக்குள்ளான மேலும் இருவர் சிகிச்சைகளுக்காக முந்தல் மற்றும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூக்கத்தில் வாகனம் செலுத்தியமை, வீதி ஒழுங்குகளை மீறியமை ஆகியனவே இக்கோர விபத்துகளுக்குக் காரணம் என சந்தேகிக்கும் வரக்காபொல மற்றும் முந்தல் பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டிருப்பதுடன் உரிய விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

தகவல்-தினகரன்

No comments:

Post a Comment