ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நான் கேட்காமலேயே தேசியப்பட்டியலுக்கு எனது பெயரை, தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரேரித்திருந்தார். எனினும், கட்சிப் பிரச்சினைகள் தொடர்பில் தலைமை என்னிடம் பேசியபோது தேசியப்பட்டியல் ஆசனத்தை நவவிக்கு விட்டுக்கொடுத்தேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மூன்று ஆசனங்களைப்பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட பின்னணியில் இருந்திருக்க வேண்டியவர்கள். அம்பாறையில், 12 மணியிலிருந்து 4 மணிவரை எமக்கு ஆசனம் கிடைக்கும் என தகவல் கிடைத்திருந்தது. இறுதி நேரத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாம் நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளோம். மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்ததற்கான நோக்கத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.