
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனையின் பாலணாவெளி கண்டத்தின் வயல்க் காணியொன்றில் வைக்கோல் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில சம்மாந்துறைப் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டன.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவை மீட்கப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சில உடற்பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டதாகக் கூறிய சம்மாந்துறைப் பொலிஸார், இவ் உடற்பாகங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கைபிடி எரிவடைந்த நிலையில் கூரிய கத்தியொன்று காணப்பட்டதாகவும் கூறினர்.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் ஏ.எச்.எம். அறூஸ், அம்பாறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செனவிரெத்தின, அம்பாறைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விஜேசேகர, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, பெரும் குற்றவியல்ப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம், அக்கிராம உத்தியோகத்தர் கே.மதன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணையை மேற்கொண்டனர்.
சில உடற்பாகங்கள் பரிதேனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 3 வாரங்களாக நற்பிட்டிமுனையில் சட்டம்பியார் வீதியில் வசிக்கும் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக இவ்விடத்திற்கு வந்த அப்பெண்ணின் உறவினர்கள் பொலிஸாரிடம் கூறினர்.

No comments:
Post a Comment