Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, October 2, 2011

கல்முனையின் வெற்றியின் பின்னர் 100 நாளில் அபிவிருத்தி திட்டங்கள் -அமைச்சர் றிசாத் பதீயுதீன் கூறுகின்றார்




கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெறுவது உறுதியானது எனது தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் முடிந்த்து 100 நாட்களுக்குள் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.
 
கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை கடற்கரை பள்ளி மைதானத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


மக்கள் வெள்ளம் இன்று அபிவிருத்தியின் பக்கம் இருக்கின்றது.நாம் உரிமையுடன் வாழ வேண்டும் என்றால்,எமக்கான சகல தேவைகளையும் அடைந்திருக்க வேண்டும்.இந்த நாட்டில் ஆயுதப் போரட்டத்தை முஸ்லிம்கள் நாடக் கூடாது என்ற எண்ணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் ஆரம்பித்தார்கள்,ஆனால் துரதிஷ்டம் அவரது மறைவின் பின்னர் தற்போதைய கட்சி தலைமை அந்த இலக்கிலிருந்து விலகி முஸ்லிம்  சமூகத்தை காட்டிக் கொடுத்து அரசியல் செய்யும் போக்கை கொண்டுள்ளது.

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றிலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போது,அரசாங்கத்திற்கு எதிரான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அரசாங்கத்தின் அபிவிருத்திகளை கொண்டுவருவதாக கூறுவது விந்தையாகவுள்ளது.எமது மக்களுக்கு அபிவிருத்திகளோ,சலுகைகளோ வேண்டாம் என்று கூறிவந்த கதை மாறி கல்முனை மாநகர சபையை தம்மிடம் தருமாறு நீளிக் கண்ணீர் விடுத்துவருகின்றது.கடந்த 4 வருடம் கல்முனையின் ஆட்சியை தன்வசம் வைத்திருந்த இக்கட்சி செய்தது என்ன வென்று கேட்கவிரும்புகின்றேன்.கடந்த 11

வருட காலமாக பாராளுமன்றத்தில் பல பதவிகளை வகித்துவந்த தலைமைத்துவம் குறைந்தது கல்முனை மக்களது பிரச்சினைகளை , கேட்டறியக் கூட ஒரு அலுவலகத்தை கல்மமுனையில் திறந்துள்ளதா ? அதற்கும் பதில் இல்லையென்று தான் கூறமுடியும்.

கல்முனை நகரம் ஏனைய நகரங்களுக்கு முன்மாதிரியானதொரு நகரமாக மாற்றுகின்ற பணியை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களினால் தான் முன்னெடுக்க முடியும் .மத்தியில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு துதி பாடி,மாகாணத்திலும்,பிரதேசத்திலும் அரச எதிர் கொள்கைகைளை மக்களுக்கு ஊட்டி.,அதன் மூலம்,மக்களை இந்த நாட்டு தலைமைக்கும்,சர்வதேசத்துக்கும்  எதிரானவர்கள் தான் இந்த நாட்டு முஸ்லிம்கள் என்பதை எடுத்துக்காட்டும் படுமோசன செயலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்கின்றது.இதற்கு எமது மக்கள் சோரம் போய்விடக் கூடாது.இவ்வாறு நீங்கள் செல்வீர்களென்றால்,அது நீங்களாகவெ உங்களுக்கு மண்ணை வாரி வீசிய நிலையாகிவிடும்.

இன்று எமது நாட்டின் சகல பகுதிகளும் அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.அதனை கல்முனை மாநகர மக்களும் அனுபவிக்க வேண்டும்,கல்முனை,மருதமுனை சாய்ந்தமருது,நற்பிட்டி முனை மற்றும் ஏனைய கிராமங்களில் அபிவிருத்திகள் இடம் பெற்றால்,மக்களுக்கு பிழையானதைச் சொல்லி அரசியல் செய்ய முடியாத நிலையேற்படும் என்பதை அறிந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளது.முழுக்க முழுக்க கல்முனை மாநகர சபை தேர்தல் பிரசாரங்களில் அபிவிருத்தி வேண்டாம் வேண்டாம் எமக்கு வேண்டும்,அபிவிருத்தியற்ற கல்முனையே வேண்டும் என்று கூறும் பொறுப்பற்ற தலைமைகளால் எமது சமூகத்துக்கு பாரிய பின்னடைவே ஏற்படுமேயொழிய,அதன் மூலம் எந்த விதமான நன்மைகளை மக்கள் அடைந்து கொள்ளமாட்டார்கள்.

கற்ற இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருக்கின்றனர்,அவற்றை பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கையெடுப்போம்.பிரதேசத்தின் விவசாயம்,கடற்றொழில் என்பன குறித்து கவனம் செலுத்துவோம்,உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.கட்சி என்பது மதமல்ல,அது ஒரு நிறுவனத்தை போன்றது.அந்த நிறுவனமானது நேர்மையாக செயற்படுமெனில், அதனது வளர்சிக்கு உதவிபுரியலாம்,அது மக்களுக்கு துரோகம் இழைத்து செயற்படுமெனில்,அதனை அகற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை நாம் உதாரணமாக கொள்ள வேண்டும்.


கடந்த கால தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு தொடராக மக்கள் நல்லாட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கிவந்துள்ளனர்..சில சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது.ஆனால் வீரவசனங்களை பேசி மக்களை பிழையாக வழிநடத்த முற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு சபையினது அதிகாரத்தையும் பெறவில்லை,எல்லா இடங்களிலும் தோல்வியினையே சந்தித்துள்ளது..இக்கட்சியின் செயற்பாடுகளை அங்கீகரிக்காததன் விளைவாகத் தான் அந்த நிலையேற்பட்டுள்ளது.இந் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை,இவ்வாறான தொரு நிலையில் ,பயங்கர வாதத்தையொழித்து நாட்டில் சமாதானத்தையேற்படுத்தியவர்கள் போன்று கூவித் திரியும் பரிதாபகரமான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

நடை பெறப்பேகும் தேர்தலானது கல்முனை மாநகர மக்களின் எதிர்கால சமூகத்தின் இலக்கு நோக்கிய பயணத்திற்கு அடித்தளம் இடும் ஒன்றாக இருப்பதை மறந்துவிட முடியாது.இந்த சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை  கிடைக்கும் என்றும் கூறவும் முடியாது.ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து போகும் போது தான் எமது அபிவிருத்தி வந்தடையும்,அதே போன்று சலுகைகளை பெறுவதுடன் அதனை உரிமைக்கான முதலீடாக மாற்றிக் கொள்ள முடியும்,என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம்,வை.எல்.எஸ்.ஹமீட்,மாகாண அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர் உட்பட பலரும்,இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.


No comments:

Post a Comment